லக்னோ,
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மனோஜ் என்கிற உத்தம். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து துப்பாக்கி முனையில் அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தநிலையில் மனோஜின் தலைக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவித்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் மதுராவில் மனோஜ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று அவனை கைது செய்ய முயன்றனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசாரை மனோஜ் சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இதனால் தற்காப்புக்காக போலீசார் மனோஜை நோக்கி சுட்டனர். இதில் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மனோஜிடம் இருந்த நாட்டு துப்பாக்கி, துப்பாக்கி தோட்டாக்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மனோஜ் தப்புவதற்கு உதவியாக இருந்த போலீஸ் ஏட்டு 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.