Sunday, September 22, 2024

அன்னபூர்ணா விவகாரம்: போராட்டத்தை அறிவித்தது தமிழக காங்கிரஸ்!

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் போராட்டத்தை அறிவித்துள்ளது.

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன், 'இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது' என்று பேசினார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது

இதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த விடியோ நேற்றிரவு பாரதிய ஜனதா கட்சியினரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் ராகுல் காந்தி, கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்: அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் கடும் கண்டனம்!

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது, பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் முறையற்ற ஜி.எஸ்.டி. வரிவிதிப்பினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

அவர் பேசும் போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பலமுனைகளில் 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் என வரி விதிக்கப்படுகிறது. இனிப்பு வகைகளுக்கு 5 சதவிகிதம், கார வகைகளுக்கு 18 சதவிகிதம், பன்னில் கிரீம் தடவினால் 18 சதவிகிதம் என பலவிதமான வரி விதிக்கப்படுகிறது. ஆனால், பன்னுக்கு வரியில்லை. அதில் கிரீம் தடவினால் வரி விதிக்கப்படுவது நுகர்வோர் மத்தியில் கேட்கப்படுகிற கேள்வி குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் கூறிய போது, அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

மேலும், உணவகத்திற்கு வருபவர்கள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒவ்வொரு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்பது நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை தருகிறது என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைத்ததற்காக நிதியமைச்சர் கேள்வி கேட்பவரை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? வைரலாகும் விடியோ! நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!

இந்தப் பின்னணியில் பா.ஜ.க.வினரின் பல்வேறு மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் ஆளான சீனிவாசனை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மூலமாக நிர்ப்பந்தப்படுத்தி நிதியமைச்சரை அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கே வரவழைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இந்நிகழ்வு சமூக ஊடகங்களில் பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

தொழில் செய்கிற ஒருவர் பலமுனை ஜி.எஸ்.டி.யினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியதற்காக அவரை அச்சுறுத்துவதும், மிரட்டுவதும் பா.ஜ.க.வின் பாசிச போக்கையே வெளிப்படுத்துகிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று மத்திய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அதற்குரிய விலையை கொடுப்பதிலிருந்து அவர் தப்ப முடியாது.

அன்னபூர்ணா விவகாரம்: மன்னிப்புக் கோரினார் அண்ணாமலை!

மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு சட்டத்தை வளைத்து பல்வேறு சலுகைகள் செய்கிற பா.ஜ.க. அரசு, சாதாரண சிறு, குறு தொழில் முனைவோர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்படுகிற பாதிப்புகளிலிருந்து எங்களை காப்பாற்றுகிற வகையில் ஒரே வரியாக மாற்றுங்கள் என்ற கோரிக்கையை பரிசீலிக்க நிர்மலா சீதாராமன் தயாராக இல்லை.

இதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறியபோது, ஒரு நிருபர் மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி கேட்ட போது, இத்தகைய குதர்க்கமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

ஏற்கனவே, பா.ஜ.க. மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பு நிர்மலா சீதாராமனின் அராஜக போக்கு காரணமாக பலமடங்கு கூடிவருவதையும், பா.ஜ.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதையும் எவராலும் தடுக்க முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில், 'நாளை(14.09.2024) சனிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024