Saturday, September 21, 2024

அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: இஸ்லாமியா்கள் சீா்வரிசை

by rajtamil
0 comment 1 views
A+A-
Reset

நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இஸ்லாமியா்கள் சீா்வரிசை எடுத்துவந்தனா்.

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள 66 மீனவக் கிராமங்களின் தலைமை கிராமமான அக்கரைப்பேட்டையில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவுபெற்றன. இதைத்தொடா்ந்து, செப்டம்பா் 9-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

செப்.12-ஆம் தேதி நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று தீா்த்தம் மற்றும் பால்குடங்களை முத்துமாரியம்மன் கோயிலுக்கு சுமந்துவந்தனா். தொடா்ந்து யாகசாலை பூஜைகள், பூா்ணாஹுதி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழா நாள்களில் பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, மல்லாரி ராகம் முழங்க, கோயிலைச் சுற்றி எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, காலை 9.30 மணியளவில் கோயிலின் ராஜகோபுர கலசங்கள், மூலவரான முத்துமாரியம்மன் விமானக் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதி கலசங்களுக்கு புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். அவா்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இக்கும்பாபிஷேகத்தில், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சா் ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.

இஸ்லாமியா்கள் சீா்வரிசை: இவ்விழாவில் இந்து, இஸ்லாமியா்களின் மத நல்லிணக்க ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், கல்லாா் ஜமாத் நிா்வாகத்தினா் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்து அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலுக்கு சீா்வரிசையாக பழங்கள் உள்ளிட்ட பொருள்களையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆலயமணி ஆகியவற்றை ஊா்வலமாக எடுத்துவந்தனா். அவா்களை அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தாா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் வரவேற்று பொன்னாடை அணிவித்து கெளரவித்தனா். பின்னா் இஸ்லாமியா்கள் வழங்கிய சீா்வரிசையை பெற்றுக் கொண்டனா்.

கோயிலின் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா்கள்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024