டெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரையாற்றினார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில், நேற்று முன் தினம் பேசிய ராகுல்காந்தி, பாஜக, ஆர்எஸ்எஸ், பற்றி கடுமையாக சாடினார். மேலும், சிவபெருமான், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகிய கடவுள்களின் படங்களை அவையில் சுட்டிக்காட்டி பேசினார். இதனால், நாடாளுமன்றத்தில் விவாதம் அனல் பறந்தது. இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என்று விமர்சித்தார். மேலும், ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்துவிட்டார் என்றும் கூறினார்.
இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது,
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பிரசாரத்தை நிராகரித்து செயல்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதை காட்டுகிறது. தவறான பாதையில் மக்களை வழிநடத்தும் அரசியல் முறியடிக்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை அரசியலமைப்பு சாசனம் என்பது கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமல்ல, அதன் உணர்வுகளும், வார்த்தைகளும் மிகவும் முக்கியம். அரசியலமைப்பு சாசனம் ஒரு கலங்கரை விளக்கம்போல் செயல்பட்டு நமக்கு (அரசுக்கு) வழிகாட்டுகிறது. 60 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அரசு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 3வது முறை ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்ததாக மாறும். சுயசார்பு நாடாக மாறும். நாடு உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரத்தில் இருந்து 3வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலைக்கு முன்னேறும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.