அரசுப் பள்ளிகள் சனாதன, மூடநம்பிக்கை பரப்புரை மையங்களா? உடனடியாக தடுக்க வேண்டும் – முத்தரசன்

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை பெருநகர எல்லைக்குள், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 'பரம்பொருள் பவுண்டேசன்' என்ற அமைப்பை சேர்ந்த சொற்பொழிவாளர் சனாதன கருத்துகளை நியாயப்படுத்தியும், மூட பழக்க, வழக்கங்களை வாழ்வின் நன்னெறியாக விளக்கியும் பேசியுள்ளார். இவரது உரைக்கு ஆட்சேபனை தெரிவித்த ஆசிரியர் மிரட்டப்பட்டுள்ளார்.

இதே சொற்பொழிவாளர் மாணவிகள் நிறைந்த மற்றொரு பள்ளி நிகழ்வில் பேசும்போது பெண்ணடிமைத்தனத்தை நியாயப்படுத்தி பேசியுள்ளார். பெண்கள் அழகின்றியும், மாற்றுத்திறனாளிகளாவும் பிறந்து வருகிறார்கள் என்றெல்லாம் பேசி அவமதித்துள்ளார். இந்த பொறுப்பற்ற, மூடத்தனமான பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்த மாணவர் அமைப்புகளின் முறையீடுகள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டுட்டுள்ளது.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு, பள்ளிக் கல்வித்துறை இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தவறுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அரசுப் பள்ளிகளை மூட நம்பிக்கை கருத்துகளுக்கான பரப்புரை மேடையாகவும், போலி என்சிசி பயிற்சி என்ற பெயரில் சமூக மோதல்களை உருவாக்கும் அமைப்புகளின் பயிற்சி களமாகவும் பயன்படுத்தி, இளைய தலைமுறையின் சிந்தனையில் வன்மம் வளர்ப்பதை பள்ளிக் கல்வித்துறை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024