மேற்கு இந்திய தீவுகளின் ஆல்ரவுண்டரான கார்லோஸ் பிராத்வெய்ட் நடுவர் தனக்குத் தவறாக அவுட் கொடுத்ததற்காக தன் ஹெல்மெட்டை பேட்டால் விளாசி பவுண்டரிக்கு வெளியே அடித்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் வீசிய 4 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி மேற்கு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர் கார்லோஸ் பிராத்வெய்ட்.
இவர், தற்போது உள்ளூர் லீக் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்த நிலையில், கேமன் தீவுகளில் நடைபெற்று மேக்ஸ்60 கரீபியன் டி10 தொடருக்கான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸுக்கு எதிரான போட்டியில் 7-வது வரிசையில் இறங்கிய பிராத்வெய்ட், 5 பந்துகளில் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு வீசப்பட்ட பந்தை ஸ்ட்ரைட்டாக அடித்த நினைத்த நிலையில் அவரது தோள்படையில் பட்ட பந்து பவுன்ஸ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனது.
இதனால், பெரும் விரக்தியடைந்த கார்லோஸ் பிராத்வைட் பெவிலியன் நோக்கி நகர்ந்தார். மைதானத்தின் நடுப்பகுதியில் இருந்து கொஞ்ச தூரம் நடந்த அவர், கோபத்தில் தன் கையில் இருந்த ஹெல்மெட்டை தூக்கிப் போட்டு பேட்டால் ஓங்கி அடித்து பறக்கவிட்டார்.
பந்து சிக்ஸருக்கு பறப்பதுபோல ஹெல்மெட் பவுண்டரிக்கு மேல் சென்று மைதானத்திற்கு வெளியே கீழே விழுந்தது. இந்த விடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
36 வயதான கார்லோஸ் பிராத்வைட் இதுவரையிலும் 3 டெஸ்ட் போட்டிகளிலும், 41 ஒரு நாள் போட்டிகளிலும், 44 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 1050 ரன்களுக்கும், 83 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.