தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 75). 3 சக்கர சைக்கிள் ஓட்டும் தொழிலாளி. 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் தீவிர தொண்டராக இருந்து வருகிறார். இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 30 இடங்களில் வெற்றி பெறும் என்று அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து பேசினார்.
அப்போது, அங்கிருந்த மற்றொருவர், அ.தி.மு.க.வுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் பந்தயம் கட்டினார்கள். அப்போது செல்வக்குமார், "அ.தி.மு.க. தோற்றுவிட்டால் எனது காலை வெட்டுகிறேன்" என்று கூறினாா்.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோற்றது. இதனால் செல்வக்குமார் நேற்று முன்தினம் அரிவாளால் தனது வலது காலில் கரண்டைக்கு கீழே லேசாக வெட்டினார். இதில் காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.