ஆடி திருவிழா: கள்ளழகர் கோவிலில் நாளை தேரோட்டம்

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

கள்ளழகர் கோவிலில் நாளை இரவு புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறுகிறது.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.45 மணிக்கு மேல் 7.20-க்குள் தேரில் அழகர் எழுந்தருள்கிறார். தொடர்ந்து தேரோட்டம் தொடங்குகிறது. இந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவில் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறும்.

கோவிலில் உள்ள 18-ம்படி கருப்பணசாமி சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பவுர்ணமியன்று மாலையில் கதவுகள் திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியாக நாளை மாலையில் படி பூஜை, சந்தனம் சாத்துப்படி உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறுகின்றன. 22-ந் தேதி தீர்த்தவாரி, 23-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெறும். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.

You may also like

© RajTamil Network – 2024