அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்,
அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆலந்தூர் தொகுதியில் அடங்கிய வாணுவம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை மூடிவிட்டு அரசு பள்ளி இயங்கி வருவதாகவும், அப்பள்ளி மாணவர்களுக்கு வேறு இடம் வழங்கிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வாணுவம்பேட்டை புதுத் தெருவில் சென்னை துவக்கப் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. அப்பள்ளி வளாகத்தில் போதிய இடம் இருந்ததால் அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் துவங்கப்பட்டது. தற்போது அந்த வளாகத்தில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையமும் கட்டப்பட்டு வருகிறது. அங்கன்வாடிக்கு அம்மா உணவகத்தின் நுழைவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை மூடவில்லை. ஆனால் அம்மா உணவகத்தில் பள்ளி நடப்பதாக கட்டுக்கதை விட்டு தலைமைக்கு தகவல் தந்ததை தீர விசாரிக்காமல் மக்கள் மத்தியில் அம்மா உணவகங்களை மூடுவது போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்க இதுபோல் அறிக்கை விட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .