கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதிகாரிகள் செல்ல மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள முதல்வர் பினராயி விஜயனின் அறிவுரையை தொடர்ந்து, இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ள சந்திப்பை அரசின் மூத்த அதிகாரிகள் புறக்கணிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தங்கக் கடத்தல் விவகாரம்
மலப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 150 கிலோ தங்கம் மற்றும் ரூ.123 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் மாநில காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம், தேச விரோத, தேச விரோத செயல்களுக்காக கேரளாவுக்குள் நுழைகிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு கடந்த வியாழக்கிழமை ஆளுநர் எழுதிய கடிதத்தில், கடந்த பல ஆண்டுகளாக தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் விவகாரம் குறித்து தன்னிடம் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையும் படிக்க : ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை -கமலா ஹாரிஸ் திட்டவட்டம்!
அதிகாரிகளுக்கு சம்மன்
ஆளுநர் ஆரிஃப் கானின் கடிதத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளிக்காத நிலையில், தங்கக் கடத்தல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முதல்வரின் பேச்சு தொடர்பான விளக்கத்தை நேரில் சந்தித்து அளிக்க தலைமை செயலாளர் சாரதா முரளீதரன் மற்றும் காவல்துறைத் தலைவர் ஷேக் தர்வேஷ் சாஹேப் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இன்று மாலை 4 மணிக்கு இருவரும் ஆளுநரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் நேரடி தலையீடு, விதிகளுக்கு முரணாக மாநில அரசு கருதுவதால் அதிகாரிகள் நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே, கேரள ஆளுநர் – முதல்வர் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், முதல்வரின் உத்தரவு மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.