இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

மலப்புரம்,

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. 2022 ம் ஆண்டு முதன் முதலாக ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், ஆப்ரிக்க நாடுகளில், 'எம் – பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து, உலகளவில் அந்த தொற்றை பொது சுகாதார அவசரநிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் குரங்கம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. சர்வதேச பயணியர் உள்பட வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இந்தியாவில் குரங்கம்மையின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும், மேலும் உலகளவில் புழக்கத்தில் உள்ள புதிய வகையான வைரசுடன் கண்டறியப்பட்ட முதல் பாதிப்பு இதுவாகும். இது மிகவும் தீவிரமானதாக அறியப்படுகிறது. இந்தியாவில் இந்நோய் பெரிய அளவில் பரவும் அபாயம் குறைவாக இருந்தாலும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்க மாநிலங்கள் முழுமையாக தயாராக உள்ளன. மக்கள் பீதியடையத் தேவையில்லை" என்று தெரிவித்தார்.

முன்னதாக அரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு, கடந்த வாரம் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024