இந்தியாவுக்கு 153 ரன்கள் இலக்கு; தொடரை கைப்பற்றுமா? இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.கோப்புப் படம்படம் | பிசிசிஐ
இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று (ஜூலை 13) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். வெஸ்லி மத்வீர் 25 ரன்கள் எடுத்தும், மருமனி 32 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கியவர்களில் கேப்டன் சிக்கந்தர் ராஸாவைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராஸா 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.