Saturday, October 26, 2024

இந்திய அணி எங்கு தவறு செய்கிறது? பந்துவீச்சு பயிற்சியாளர் பதில்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: சதம் விளாசிய சௌத் ஷகீல்; 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து தடுமாற்றம்!

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எங்கு தவறு செய்கிறது இந்திய அணி?

முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறுவது அணிக்கு அழுத்தமான சூழலை உருவாக்குவதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மோர்னே மோர்க்கல் பேசியதாவது: அணி சிறப்பாக செயல்பட தவறுவதற்கு பேட்ஸ்மேன்கள் காரணமா அல்லது பந்துவீச்சாளர்கள் காரணமா என்ற கேள்விக்குள் நான் ஒருபோதும் செல்ல விரும்புவதில்லை. ஆனால், டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவிப்பது முக்கியம். கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணி அதனை செய்யத் தவறிவிட்டது.

இதையும் படிக்க: வார்னர் திரும்ப விளையாடுவாரா? கம்மின்ஸ் கூறியதென்ன?

எங்களிடம் உலகத் தரத்திலான பேட்டிங் வரிசை இருக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்கள். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு அதிக அளவிலான ரன்கள் குவிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய அணி இந்த கடினமான சூழ்நிலையிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறது என்றார்.

நியூசிலாந்துக்கு பாராட்டு

நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டதாக மோர்னே மோர்க்கல் அந்த அணியை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நியூசிலாந்து அணி மிகச் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை தொடர்ச்சியாக மாற்ற மிகவும் சிரமப்பட்டனர். அந்த அளவுக்கு நியூசிலாந்து அணி சிறப்பாக பந்துவீசியது. மிட்செல் சாண்ட்னர் சிறப்பாக பந்துவீசினார்.

இதையும் படிக்க: ஓராண்டில் விரைவாக 1,000 ரன்கள்..! ஜெய்ஸ்வால் புதிய சாதனை!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி மிகவும் தயாராக வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களின் தன்மைக்கேற்ப நியூசிலாந்து அணி தங்களை உடனடியாக சிறப்பாக மாற்றிக் கொண்டுள்ளனர். இதுவரை நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024