Monday, September 23, 2024

‘இந்த மாதமே மாநாடு’ – கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் விஜய் உறுதி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாட்டை நடத்த விஜய் முடிவுசெய்துள்ளார்.

மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மாநாட்டை நடத்துவது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. செப்.23 குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய நேரத்தில் நடத்த முடியுமா என்றும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் விஜய் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். மாநாட்டை இந்த மாதத்திற்குள் நடத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் சிலர் மாநாட்டின் போது விஜய்யின் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024