இன்று மகா சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுங்கள்..!

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை தொடங்கலாம்.

விநாயகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாள் 'சங்கடஹர சதுர்த்தி' ஆகும். அதிலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தியான மஹா சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது கூடுதல் சிறப்பு. வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி தினத்திலும் வழிபாடுகள் செய்வதால் கிடைக்கும் பலன், மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபடுவதால் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

அவ்வகையில், இன்று மகா சங்கடஹர சதுர்த்தி வருகிறது. இன்று மாலை 6.15 மணிக்கு தொடங்கி நாளை மாலை 3.48 மணியுடன் சதுர்த்தி திதி முடிவடைகிறது. மாலையில் திதி ஆரம்பித்தாலும், சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதம் அனுஷ்டிப்பது மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது.

பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் தான் மேற்கொள்ள வேண்டும். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதி.

சதுர்த்தி விரதம்

அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம் புல் சார்த்தி, விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எளிமையான உணவுகளை குறைந்த அளவில் உட்கொண்டு விரதம் இருக்கலாம். மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.

வழிபாடு

விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். விநாயகருக்கு கொழுக்கட்டை செய்யும் போதே உங்களின் வேண்டுதல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கோ பிரசாதமாக வழங்கலாம். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க தொடங்குபவர்கள் மகா சங்கடஹர சதுர்த்தியில் விரதத்தை துவங்கலாம். அதோடு மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டம் இருந்தாலும் அது விலகி விடும் என்பது நம்பிக்கை. இந்த சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுபவர்களுக்கு சந்திரன் தோஷம் ஏற்படாது, ஜாதக ரீதியாக சந்திர தோஷம் இருந்தால் கூட நீங்கும் என்பது ஐதீகம்.

You may also like

© RajTamil Network – 2024