அமராவதி,
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஈப்புருபாலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்டர்ஷிப் படித்து முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது அங்குள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுவரை ஒட்டிய முட்புதரில் இளம்பெண் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். உடல் முழுவதும் பலத்த காயம் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவுடிகளான தேவரகொண்டா விஜய், தேவரகொண்டா காந்த் மற்றும் மகேஷ் ஆகியோர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, சம்பவம் நடந்த இடத்தில் 3 பேரும் கஞ்சா போதையில் இருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற இளம்பெண்ணை கடத்திசென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு முட்புதரில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.