இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனத்தின் போர் தொடரும் என லெபனான் தூதர் ராபி நர்ஷ் இன்று (அக். 18) தெரிவித்தார்.
அவர்கள் புரட்சியாளரைக் அழிக்கலாம், ஆனால் புரட்சியை அழிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இதனிடையே தெற்கு காஸாவில் நேற்று நடைபெற்ற தாக்குதலில், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். சில வாரங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சின்வார் கவனித்து வந்தார். தற்போது அவரும் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய லெபனான் தூதர் ராபி நர்ஷ் கூறியதாவது,
''கடந்த இரவில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போதிய அளவிலான தகவல்களை நான் இன்னும் பெறவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் புரட்சியாளரை அழிக்கலாம்; ஆனால் புரட்சியை ஒருபோதும் அழிக்க முடியாது என மகாத்மா காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். புரட்சிக்கான காரணங்கள் தனியொரு மனிதனுக்கானது அல்ல.
இதையும் படிக்க | ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ
சின்வார், ஹமாஸ் படைக்குத் தலைவர் மட்டும் அல்ல. எல்லைப் பகுதி ஆக்கிரமிப்பை எதிர்க்கும் உரிமை அவர்களுக்கு (ஹமாஸ்) இருப்பதால் பாலஸ்தீன போர் தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தங்கள் மண்ணில் கண்ணியமாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு. உத்திரவாதமான எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்காக உரிமை அவர்களுக்கு உள்ளது. சுதந்திர அரசைப் பெறுவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.