இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இன்று 51 பேர் பலியானதாக லெபனான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
மேலும், இந்தத் தாக்குதலில் 223 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 குழந்தைகள், 94 பெண்கள் என 564 பேர் கொல்லப்பட்டதான லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இஸ்ரேலின் இன்றைய தாக்குதலால் நேரிட்ட விளைவுகள் குறித்துப் பேசிய லெபனான் சுகாதாரத் துறை அமைச்சர், ஃபிராஸ் அபியாத், இஸ்ரேலின் தாக்குதலில் இன்று 51 பேர் உயிரிழந்தனர். 233 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களுக்கு இடையே போர் நடைபெற்றுவரும் 2006 முதல் லெபனானில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
படிக்க | லெபனான் மீது தாக்குதல்: 5 நாள்களில் 90 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!
கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.