இஸ்ரேல் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தெற்கு லெபனானில் 15 பேர் உயிரிழந்தனர்.
இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் லெபனான் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் நபாட்டியா பகுதியில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சேர்ந்த 5 பேர் இறந்ததாகவும் லெபனான் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குப் பிறகு தாக்குதல்
காஸாவின் ஹமாஸ் படைக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில் தெற்கு லெபனானில் உள்ள கானா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி இன்று (அக். 16) தாக்குதலில் ஈடுபட்டது. இதில், கட்டட இடிபாடுகளில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளையும் இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த 5 பேர் பலியாகியதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டியிடம் அமெரிக்கா உறுதியளித்திருந்தது. இதனால் ஒருவார காலத்திற்கு பெய்ரூட்டில் தாக்குதல் நடத்தப்படாமல் இருந்தது.
ஆனால், பெய்ரூட்டில் நடத்திய தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.
இதையும் படிக்க | நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 94 பேர் பலி
லெபனானில் 2,300 பேர் பலி
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது அக். 8ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் பாலஸ்தீனத்தின் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக காஸா எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதேபோன்று ஹமாஸுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்கள் மீதும் இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை லெபனானில் இருந்து 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில் 2,300 பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் கடந்த மாதம் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.