உக்ரைன் தலைநகருக்கு கடந்த வாரம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் கீவ்வில் அந்நாட்டின் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.
அப்போது ‘உக்ரைனில் விரைவில் அமைதி திரும்புவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் உத்வேகத்துடன் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது; இப்போரின் தொடக்கத்தில் இருந்தே அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது’ என்றும் பிரதமா் தெரிவித்தாா்.
இந்த நிலையில், உக்ரைனில் அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பை தகர்க்கும் விதமாக, உக்ரைன் மீது ரஷியா ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை வரை பல மாதங்களில் அளவுக்கு ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியது. மின்சார உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் நான்கு போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், ரஷிய அதிபா் புதினுடன் பிரதமா் மோடி இன்று(ஆக. 27) தொலைபேசி வாயிலாக உரையாடினாா்.
அப்போது உக்ரைன் போரில் அமைதி வழியில் விரைந்து தீர்வு காண வேண்டுமென்பதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ரஷியாவிடம் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், இரு தலைவர்களும் இந்தியா ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷியா – உக்ரைன் சண்டை குறித்து பரஸ்பரம் விவாதித்துக் கொண்டதாகவும், அண்மையில் உக்ரைனுக்குச் சென்றிருந்த நிலையில், அதுகுறித்தும் பேச்சுவர்த்தை மேற்கொண்டதாகப் பதிவிட்டுள்ளார்.