நடிகர் அரவிந்த் சாமி ரசிகர் மன்றங்கள் குறித்து அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதில், துணை நாயகனாக நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இப்படம் செப். 27 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் அரவிந்த் சாமி மாநாடு படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கத் தேர்வாகி பின் படப்பிடிப்புக்கான சரியான நேரம் கிடைக்காததால் அப்படத்தில் எஸ். ஜே. சூர்யா இணைந்ததைக் குறிப்பிட்டார்.
‘சார்’ மிக நல்ல படம்: விஜய் சேதுபதி
மேலும், ரசிகர் மன்றங்கள் குறித்த கேள்விக்கு, “என் மகன் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என என்னிடம் சொன்னால், இதெல்லாம் தேவையில்லை, படத்தைப் பார்த்தாமோ ரசித்தோமா என இருக்க வேண்டும் என்றே அறிவுரை வழங்குவேன். என் பையனிடம் இப்படி சொல்லிவிட்டு நானே ரசிகர் மன்றத்தை துவங்கி மற்றவர்களின் பிள்ளைகளைக் கெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
இன்று சினிமாவிலிருக்கிறேன். நாளை இது வேண்டாமென்று வேறு தொழிலுக்குக் கூட செல்வேன். ஆனால், என்னை நம்பி மன்றம் ஆரம்பித்தவர்கள் என்ன ஆவார்கள்? உங்க மகனுக்கு ஒரு நியாயம் ஊரான் பிள்ளைக்கு இன்னொரு நியாயமா?” என அதிரடியாக பதிலளித்தார்.
அரவிந்த் சாமியின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலானதுடன் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு… சார் டிரைலர்!