உடல்நிலை மோசமடைந்துள்ளதால், தொழிலதிபர் ரத்தன் டாடா (86) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, வழக்கமான பரிசோதனைக்காகச் சென்றதாக ரத்தன் டாடா அறிக்கை மூலம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் முக்கியமானத் தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ரத்தன் டாடா. டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். இவரின் தலைமையில், 1991 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய நிறுவனமாக டாடா உயர்ந்தது.
மருத்துவமனையில் ரத்தன் டாடா
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு நாள்களுக்கு முன்பு தகவல்கள் பரவின.
இதையும் படிக்க | பாஜக எம்.எல்.ஏ.வை கன்னத்தில் அறைந்த வழக்குரைஞர்! வைரல் விடியோ!
ஆனால், இதற்கு டாடா மறுப்பு தெரிவித்திருந்தார். வயது மூப்பு மற்றும் அது தொடர்பான பிரச்னைகளுக்காக வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனைக்குச் சென்றதாகவும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது ரத்தன் டாடா உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.