கோவை : தமிழக அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராகப் பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும் என்று பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல், மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல திட்டம், மக்களுக்கான திட்டம் இது. இந்த முடிவு பொத்தம் பொதுவாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கக் கூடியது. முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக சொல்லுகிறார்கள். சேம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அதைப் பற்றி முதல்வர் கண்டு கொள்ளாதது ஏன்?
சகோதரர் அன்பில் மகேஷ் பகுதியில் அரசு கொடுக்கும் முட்டை வெளி கடைகளில் விற்பது அதிர்ச்சி அளிக்கிறது.. மகா விஷ்ணு கைது செய்தது போன்று எப்போது முட்டையை தூக்கி சென்றவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்?
கூட்டணியில் பிரச்சனை காரணமாக திருமாவளவன் மாநாடு நடத்துகிறார். திடீர் வதந்தி கிளம்புகிறது, உதயநிதி துணை முதல்வர் பதவி ஏற்கப் போகிறார். தற்போது நல்ல நாள் இல்லாத காரணத்தினால் பதவி ஏற்க மாட்டார்கள். காரணம் இவர்கள் பகுத்தறிவாளர்கள்.
உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும். திருமாவளவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை.. நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை. முதல்வரை பார்த்து திருமா பயந்து வந்துள்ளார். அண்ணாமலை படிக்கச் சென்று இருக்கிறார். பாஜகவில் பிரச்சனை இல்லை. ஜி.எஸ்.டி .பற்றி தவறான கருத்து பரவி வருகிறது. நடிகர் விஜய் ஒற்றை சாயம் பூசி கொண்டு செல்லக் கூடாது. பொதுவான அரசியலை விஜய் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் தமிழிசை.