டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக (ஒரு லட்சம் கோடி டாலர்) ஆவார் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
துபாயை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபார்மா கனெக்ட் அகாடமி உலகின் பணக்காரர்கள் குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வருகிற 2027 ஆம் ஆண்டு, உலகின் முதல் டிரில்லியனராக ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அவரது சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரை(ஒரு ட்ரில்லியன் டாலர்) எட்டும். இந்திய மதிப்பில் தோராயமாக 83 லட்சம் கோடி ரூபாய்.
ப்ளூம்பெர்க்கின் பில்லியனர் குறியீட்டின்படி, அவரது ஆண்டு சொத்து மதிப்பு 110%-க்கும் மேல் அதிகரித்து வருகிறது.
சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்! தீவிர சிகிச்சை
அடுத்ததாக, கௌதம் அதானி 2028 ஆம் ஆண்டுக்குள் இரண்டாவது டிரில்லியனாக மாறுவார் என்றும் அவரது சொத்து மதிப்பு 123% என்ற அளவில் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்விடியா நிறுவனர் ஜென்சன் ஹுவாங், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், எல்விஎம்ஹெச் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் போன்ற பிற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 2030 ஆம் ஆண்டளவில் டிரில்லியன் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டி 1.19 டிரில்லியன் டாலர் (ரூ. 99.86 லட்சம் கோடி) ஆக உயர்ந்துள்ளதாக சமீபத்தில் பார்ச்சூன் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹூரூன் இந்தியா பட்டியலின்படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாவதாகத் தெரிவிக்கிறது. 1,539 பேர் ரூ. 1,000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர். இதற்கிடையில், புளூம்பெர்க் குறியீட்டின்படி, அம்பானி 111 பில்லியன் டாலர்(9 லட்சம் கோடி ரூபாய்), அதானி 99.6 பில்லியன் டாலர்(8.26 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.