உத்தரப் பிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க நிகழ்வில் பாஜக பெண் எம்எல்ஏ ரயில் தண்டவாளத்தில் விழுந்தத்தால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.
ஆக்ரா – வாரணாசி வந்தே பாரத் தொடக்க நிகழ்வின்போது எட்டவா தொகுதி பாஜக பெண் எம்எல்ஏ சரிதா பதெளரியா நடைமேடையில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ரயில் தண்டவாளத்தில் இருந்து தவறி விழுந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலாகியுள்ளது. மாலை 6 மணியளவில் நடைமேடையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
நடைமேடையில் ஏராளமானோர் பச்சைக் கொடியை ஏந்தியபடி இருந்த நிலையில், 61 வயதான பாஜக பெண் எம்எல்ஏவும் கூட்டத்தில் ஒருவராக பச்சைக் கொடியை ஏந்தியப்படி நின்றுக்கொண்டிருப்பதாக, விடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் பதவி: அக்னிப் பரீட்சைக்குத் தயாராகும் கேஜரிவால்!
இந்த நிலையில், நடைமேடையில் குழுமி இருந்த கூட்டத்தில் நிலைதடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்த எம்எல்ஏவை, பாதுகாப்பு காவலர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சேர்ந்து உடனடியாக மீட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள் தகவல் கொடுத்து ரயிலை நிறுத்தியதால், விபத்து தவிர்க்கப்பட்டது.
பாஜக பெண் எம்எல்ஏ சரிதா பதெளரியாவை காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆக்ரா – வாரணாசி வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். ரயில்வே அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆக்ராவிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.