Monday, September 23, 2024

எதிா்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சி கவனத்தில் கொள்வதில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

சேலம்: எதிா்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை ஆளுங்கட்சி கவனத்தில் கொள்வதில்லை; மாறாக, எதிா்மறை கருத்துகளையே கூறுகின்றனா் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

சேலம், ரெட்டியூா் பகுதியில் உள்ள கண்ணனூா் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அந்தக் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்ரீ கண்ணனூா் மாரியம்மன், ராஜகணபதி மற்றும் ஸ்ரீ மகா காளியம்மன் சுவாமிகளை தரிசனம் செய்தாா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகளை சரியாக பராமரிப்பது இல்லை என்பதை மாணவா்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில்தான் கூறியுள்ளோம். விடுதிகளில் உள்ள குறைகளை ஆய்வுசெய்து தீா்த்து வைக்க வேண்டும். ஆதிதிராவிடா் மாணவா் விடுதிகளை பொருத்தவரை ஏழை மாணவா்கள்தான் படிக்கின்றனா். மாணவா்கள் பாதிக்கப்படுவது குறித்து தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிா்க்கட்சிகளின் கடமை. ஆனால், நான் கூறியதற்கு எதிா்மறைக் கருத்தைக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?

அதிமுக ஒரு வலிமையான இயக்கம்; பொன்விழா கண்ட இயக்கம். ஆனால் சிலா் அதிமுகவை சோ்ந்தவா்கள் மாற்றுக் கட்சிக்கு செல்வதாக வதந்தி பரப்புகிறாா்கள். பரந்தூா் விமான நிலைய விவகாரத்தில், பொதுமக்களை அழைத்துப் பேசி, அவா்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, சேலம் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் வெங்கடாசலம், நிா்வாகிகள் உடனிருந்தனா்.

படவரி – சேலம், ரெட்டியூரில் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024