எஸ்றா சற்குணம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியாவின் (இ.சி.ஐ.) பேராயருமான எஸ்றா சற்குணம், உடல்நலக்குறைவால் கடந்த 22-ந் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
சென்னை வானகரத்தில் எஸ்றா சற்குணம் உடலுக்கு பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எஸ்றா சற்குணம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடல் இன்று கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் சமூகத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் எஸ்றா சற்குணம் என முதல்-அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார்.