ஐபிஎல் தொடர் 2025-27 ஆம் ஆண்டுக்கான வீரர்களை தக்கவைப்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் உரிமையாளர்களுடன் கடந்த ஜூலையில் பிசிசிஐ தலைமையகத்தில் ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டது.
இதனையடுத்து, தற்போது ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்கவைப்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!
ஐபிஎல் நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
1. ஒவ்வொரு அணியும் தங்களது அணியிலிருந்து 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம். தக்கவைத்துக் கொள்வது அல்லது ரைட் டு மேட்ச் என்ற முறைப்படி 6 வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக்கொள்ள முடியும்.
2. வீரர்களை தக்கவைப்பது மற்றும் ரைட் டு மேட்ச் முறைப்படி வீரர்களை அணியில் தக்கவைத்துக் கொள்ளும் விஷயங்களில் அணிகள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். தக்கவைக்கப்படும் 6 வீரர்களில், ஒரு அணி அதிகபட்சமாக சர்வதேச அணிகளில் விளையாடிய 5 வீரர்களை (இந்திய வீரர் & வெளிநாட்டு வீரர்) அணியில் தக்கவைத்துக் கொள்ளலாம். அதேபோல, தேசிய அணிக்காக விளையாடாத (அன்கேப்டு பிளேயர்) 2 வீரர்களை ஒரு அணி அதிகபட்சமாக தக்கவைத்துக் கொள்ளலாம்.
3. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான ஏலத்துக்கு ஒரு அணிக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி!
4. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக போட்டிக்கான சம்பளம் என்பது கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் அணியில் விளையாடும் வீரர் (இம்பாக்ட் பிளேயர் உள்பட) ஒவ்வொருவருக்கும் போட்டி ஒன்றுக்கு ரூ.7.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். அவருக்கு ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் தொகை அல்லாது இந்த தொகை கூடுதலாக வழங்கப்படும்.
5. ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயரை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வீரர்கள் அடுத்தடுத்து நடைபெறும் ஐபிஎல் ஏலங்களில் கலந்துகொள்ளும் தகுதியை இழந்துவிடுவர்.
6. ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுத்துக் கொள்ள தங்களது பெயரை பதிவு செய்த வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகு, தொடர் தொடங்குவதற்கு முன்பு தன்னால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது எனக் கூறினால், அவர் அந்த தொடரிலிருந்து தடை செய்யப்படுவார். அடுத்த இரண்டு சீசனின் வீரர்கள் ஏலத்திலும் கலந்துகொள்ள முடியாது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!
7. சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஒருவர் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடவில்லையென்றால், அவர் புதிய வீரராக (அன்கேப்டு பிளேயர்) கருதப்படுவார். அதேபோல ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக 5 ஆண்டுகளாக பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெறாத வீரரும் புதிய வீரராகவே (அன்கேப்டு பிளேயர்) பார்க்கப்படுவார். இந்த விதிமுறை இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
8. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை தொடரும்.