ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981 கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணை

இதனிடையே கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து அடைகிறது. இதன்படி நேற்று இரவு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1.32 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 102 அடியை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதனால் பள்ளிபாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளான ஜனதா நகர், மீனவர் தெரு, நாட்டான் கவுண்டன் புதூர் உள்ளிட்ட இடங்களில் ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024