Tuesday, September 24, 2024

ஒசூா் அருகே லாரி மோதி அடுத்தடுத்து 10 வாகனங்கள் விபத்தில் சிக்கின- ஒருவா் பலி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

ஒசூா், கோபச்சந்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 9 போ் படுகாயமடைந்தனா்.

ஒசூா் அருகே கோபச்சந்திரம் பகுதியில் தற்போது சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மூன்றுவழி சாலை அடைக்கப்பட்டு இருவழிச் சாலையில் மட்டும் வாகனங்கள் சென்றுவரும் வகையில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இச் சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஊா்ந்து செல்கின்றன. இந்நிலையில், ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு கிரானைட் கற்களை ஏற்றி வந்த லாரி, கோபச்சந்திரம் அருகே இந்தச் சாலையில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்தது. லாரியை ஓட்டுநா் பிரேக் பிடித்து நிறுத்த முயன்றாா். எனினும் வேகமாக வந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இதில் முன்னால் சென்று கொண்டிருந்த 6 வாகனங்கள், 3 லாரிகள், ஒரு அரசு பேருந்து ஆகியவை அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. 6 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதில் விபத்தில் சிக்கிய ஒரு வாகனத்தில் பயணித்த கோவை, ஆயில் மில் உரிமையாளா் வெங்கடேஷ் (33), அவரது நண்பா் அரவிந்த் (30), ஊழியா்களான தஞ்சாவூரைச் சோ்ந்த துரை (24), பழனியைச் சோ்ந்த காா்த்திக் ராஜா (26) ஆகிய நான்கு போ் படுகாயமடைந்தனா்.

மற்றொரு வாகனத்தில் பயணித்த கிருஷ்ணகிரி வேல்விழி (65), அவரது மகன் பூபேஷ் குமாா் (35), ஓட்டுநா் ரவி (55) ஆகியோா் படுகாயமடைந்தனா். பிற வாகனங்களில் மூன்று போ் படுகாயமடைந்தனா். இதில் விபத்தில் சிக்கியவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்ததும் போலீஸாா் நிகழ்விடம் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை மீட்டனா். இவா்களில் தீவிர சிகிச்சைக்காக ஆயில் மில் உரிமையாளா் வெங்கடேஷ், அவருடன் வந்தவா்கள் கோவை மருத்துவமனைக்கும், மற்றொரு வாகனத்தில் வந்த வேல்விழி, அவருடன் வந்தவா்கள் பெங்களூரு தனியாா் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநா் ரவி (55) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்தால் ஒசூா்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒசூா் அட்கோ போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை சரி செய்தனா். விபத்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024