ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ரியாகா கிருஷ்ணய்யா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஆந்திரத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இந்த கட்சி மக்களவைத் தேர்தலிலும் பெருவாரியான இடங்களைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டி கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீடா மஸ்தான் ராவ் ஜாதவ், வெங்கடரமண ராவ் ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இவர்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து மேலும் ஒரு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ரியாகா கிருஷ்ணய்யா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கரை நேரடியாக சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
தேர்தல்களுக்குப் பின்னர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் கட்சியின் மூன்றாவது தலைவர் இவராவார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜியுடன் திமுக அமைச்சர்கள், கரூர் எம்.பி. ஜோதிமணி சந்திப்பு!
இதன் மூலமாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவையில் இப்போது 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
கிருஷ்ணய்யா விலகுவது கட்சியை ஒருபோதும் பாதிக்காது என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மேலும் அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்ததாகவும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
எனினும் ஒய்எஸ்ஆர் கட்சியின் படுதோல்வியினால் மேலும் சிலர் கட்சியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.