இந்தியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநீதியின் சக்கர வியூகத்தை உடைக்கும் என்று காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தல்
ஜம்மு-காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டத் தேர்தலில் 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 26 இடங்களுக்கான தேர்தலில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட 239 வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே 26 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இன்று(செப்டம்பர்.25) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
புதுக்கோட்டை அருகே காரிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு: தற்கொலையா?
ராகுல் காந்தி எக்ஸ் பதிவு
இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீர் சகோதர,சகோதரிகளே இன்று நடைபெறும் இரண்டாவது கட்ட தேர்தலில் உங்கள் உரிமை, வளமைக்காக இந்தியா கூட்டணிக்கு அதிகளவில் வாக்குகளை செலுத்த வேண்டும். உங்கள் மாநில உரிமைகளைப் பறித்த பாஜக அரசு உங்களை அவமானப்படுத்தி உங்களது அரசியல் உரிமைகளுடன் விளையாடுகிறது.
இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவால் உருவாக்கப்பட்ட அநீதிக்கான சக்கர வியூகத்தை உடைத்து ஜம்மு-காஷ்மீரை வளமான பாதையில் கொண்டு செல்ல முடியும்” எனப் பதிவிட்டுள்ளார்.