அரசியலுக்கு புதிது என்பதால் கங்கனா ரணாவத்துக்கு அரசியல் புரிய நாளாகும் என லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் இன்று (செப். 26) தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டுவருவது குறித்து கங்கனா பேசியது சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் மன்னிப்பும் கோரினார். அவரின் இத்தகைய செயல் விமர்சனத்துக்குள்ளான நிலையில், சிராக் பாஸ்வான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் குறித்து கங்கனா ரணாவத், சர்ச்சைக்குரியவகையில் பேசி சிக்குவது இது இரண்டாவது முறையாகும்.
2021ஆம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து, 100 ரூபாய்க்காக போரட்டத்தில் உட்காரந்து இருக்காங்க என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது சர்ச்சையானது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் பேசிய அவர், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக சில மாநிலங்களில் மட்டுமே போராட்டம் நடந்தது. விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டுவர வேண்டும் எனக் கூறியிருந்தார்.
நாடு வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இச்சூழலில், வேளாண் சட்டங்களைத் திரும்ப கொண்டு வருவது விவசாயிகளின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி, வேளாண் துறைக்கு பலனளிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசு கடந்த 2021ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியது. விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகளின் தொடா் போராட்டத்தைத் தொடா்ந்து ந்த 3 சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டன.
இதனிடையே வேளாண் சட்டங்கள் குறித்து கங்கனா பேசியது சர்ச்சையானது.
படிக்க | ஜம்மு-காஷ்மீரில் அதிகமுறை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது யார்?
இந்நிலையில் கங்கனா ரணாவத் குறித்து பேசிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான்,
''கங்கனா பேசியது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. அவர் தான் இன்னும் ஓர் நடிகை அல்ல என்பதை உணர வேண்டும். அவர் தற்போது ஒரு கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்.
அவரின் தனிப்பட்ட கருத்து என்றால் அதனை நான் மரியாதை கொடுத்து ஏற்கிறேன். ஆனால், அரசியல் கட்சியின் ஒரு அங்கமாக மாறியபிறகு, கட்சி முடிவுகளை அவமதிக்காத வகையில் பேச வேண்டியது அவசியமான பொறுப்பாகிறது.
கங்கனா அரசியலுக்கு புதியவர். இதுபோன்ற செயல்களைப் புரிந்துகொள்ள நாள்கள் தேவைப்படும். ஆனால், அவர் புத்திசாலிதான். இவற்றை விரைவில் புரிந்துகொள்வார்'' என சிராக் குறிப்பிட்டார்.