கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) பயணித்த சுமார் 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு முதல் கட்டமாக குடி நீர், பிஸ்கட், பிரட் போன்றவை வழங்கபட்டுள்ளது. நல்வாய்ப்பாக விபத்தில் உயிரிழப்பில்லை என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு 8.30 மணியளவில் விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) பயணித்த சுமார் 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கவரப்பேட்டையிலிருந்து பேருந்துகள் மற்றும் மின்சார ரயில் மூலம் நள்ளிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
விபத்துக்குள்ளான ரயிலில் வடமாநிலத்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்ததாகவும், அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவு, தண்ணீர் வழங்கப்பட்ட பின் சிறப்பு ரயில் மூலம் சனிக்கிழமை (அக்.12) அதிகாலை 4.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிக்க |மோடி அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் பலி கொடுக்க வேண்டும்?: ராகுல்
இந்த நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து செய்தியாளர்களுடன் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் சரக்கு ரயிலில் 2 பெட்டிகள் எரிந்தன.பயணிகள் ரயிலில் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
முதல்வரின் உத்தரவின்பேரில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை மீட்டனர்.ரயிலில் இருந்த 1360 பயணிகளும் பத்திரமாக மீட்டகப்பட்டனர். இதில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேருக்கு மட்டும் அதிக காயம் ஏற்பட்டிருப்பதால் அவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு சமையல் செய்யப்பட்டு வருகிறது .முதல் கட்டமாக குடி நீர்,பிஸ்கட்,பிரட் போன்றவை வழங்கபட்டுள்ளது. நல்வாய்ப்பாக விபத்தில் உயிரிழப்பில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.