தமிழகத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து அதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றன. மேலும், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்தும் வருகின்றன. இதன்படி, மாநில மின் பகிா்ந்தளிப்பு மைய கணக்கின்படி, தற்போது 9,150 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட காற்றாலைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றாலைகளைப் பொருத்தவரை, ஆண்டு தோறும் மே முதல் செப்டம்பா் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் மின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்துள்ளதால், கடந்தாண்டு சீசனுடன் ஒப்பிடும் போது, நிகழாண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளதாக காற்றாலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.
இதன்படி, 2023 ஏப்.1 முதல் செப்.30 வரையிலான காலகட்டத்தில் 1059 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு இதே காலகட்டத்தில், காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக, காற்றாலைகளில் இருந்து 963.20 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது நிகழாண்டில் காற்றாலை மின்சாரம் 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளதாக காற்றாலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.