Sunday, September 22, 2024

“காவிரி உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது” – அமைச்சர் துரைமுருகன்

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

“காவிரி உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது” – அமைச்சர் துரைமுருகன்

மேட்டூர்:“மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30-ம் தேதி எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையில் சனிக்கிழமை (ஆக 3) காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மேட்டூர் அணையின் 16 கண் பாலம், சுரங்க மின் நிலையம், அணைப் பூங்கா மற்றும் வலது கரை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். பின்னர், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அணையின் வலது கரைப் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் மலர்தூவி காவிரியை வணங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் மேகேதாட்டு அணையை கட்ட விடவே மாட்டோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிலோ மேகேதாட்டு என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளது. மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்குப் போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேட்டூர் அணையின் உபரி நீரை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பது எங்களின் ஆசையும்கூட அதற்கு போதுமான அளவில் நிதி தேவைப்படுகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உபரிநீர் திட்டத்தில் நூறு ஏரிகளை நிரப்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், 100 ஏரிகள் எங்கு இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியவில்லை. தற்போது வரை 52 ஏரிகளில் உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரிகளில் காவிரியின் உபரி நீர் நிரப்பும் திட்டத்தை மேச்சேரி வரை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் காவிரி நீரை பயன்படுத்தி நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அந்த மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின்னர் இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அத்திக்கடவு -அவிநாசி திட்டம் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும்” என்றார்.

அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, எம்பி,-க்கள் செல்வகணபதி (சேலம்), மணி (தருமபுரி), எம்எல்ஏ,-க்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), சதாசிவம் (மேட்டூர்), மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, நீர்வளத்துறை மண்டல தலைமைப் பொறியாளர் தயாளகுமார், கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், நிர்வாக செயற்பொறியாளர் சிவகுமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024