காஸாவில் குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 87 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை(அக். 19) நள்ளிரவு, வடக்கு காஸாவின் பெய்ட் லாஹியா நகரத்தில் இந்த கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸாவில் இந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல்களில்தான்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் சம்பவ இடத்திலிருந்து தகவல்களை முழுமையாகப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் பலர், இன்னும் மீட்கப்படாமல் இருப்பதாகவும் காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களால் அப்பகுதி முழுவதும் உருக்குலைந்து போயுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட மீட்புப் பணியில் ஈடுபடும் வாகனங்களும் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாத சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இஸ்ரேல் தாக்குதல்களில் இதுவரை பாலஸ்தீன மக்கள் சுமார் 42,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளதால் அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. காஸாவில் சுமார் 2.30 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அப்பகுதிகளில் தற்போது 3 மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், மருந்துகள் பற்றாக்குறை நிலவுவதால் காயமடைந்தோருக்கும், உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
போதிய உணவு, எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியுறுவதாக காஸா அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டாலும் சண்டை தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதால், காஸாவில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே தெரிகிறது.
இதையும் படிக்க:ஹமாஸ் தலைவா் கொல்லப்பட்டாலும் சண்டை தொடரும்! – இஸ்ரேல் அறிவிப்பு