Monday, October 28, 2024

கிருஷ்ணகிரி: மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணிநீக்கம்!

by rajtamil
0 comment 0 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் – பாகலூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த விளையாட்டுப் போட்டியின்போது, உடற்கல்வி ஆசிரியரின் கைக்கடிகாரம் திருடப்பட்டதாக எழுந்த புகாரில் மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி நடந்த போது, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், போட்டியை நடத்திய தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை ஒரு பள்ளி மாணவி திருடியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவியின் பள்ளியைச் சேர்ந்த பயிற்சியாளர், புதிய கடிகாரத்தை வாங்கிக்கொடுத்தும் சமாதானம் அடையாத உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளரை கடுமையாக திட்டியும், மாணவியை கடுமையாக தாக்கியும் உள்ளார். ஆசிரியர், மாணவியை அடித்தபோது, அவர் நிலைத்தடுமாறி கீழே விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க.. தள்ளுபடி விலையில் கார்கள் விற்பனை!

சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களும் மாணவியுடன் வந்து கைக்கடிகாரத்தைத் திருப்பிக்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், மாணவி தாக்கப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைத்தளத்தில் பரவியதன் மூலம், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024