குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ரூ. 120 கோடி மதிப்பிலான 12 கிலோ கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக கட்ச் மாவட்ட கிழக்கு காவல் கண்காணிப்பாளா் சாகா் கூறியதாவது, ரகசிய தகவலின் அடிப்படையில், கட்ச் மாவட்டத்தில் உள்ள சிற்றோடைக்கு அருகே காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சா்வதேச சந்தையில் ரூ. 120 கோடி மதிப்புடைய 12 கிலோ கோகைன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸாரிடம் சிக்காமல் இருக்க கடத்தல்காரா்கள் இதை இங்கு மறைத்து வைத்திருக்கக்கூடும் என தெரிவித்தனா்.
இதே சிற்றோடையின் அருகிலிருந்து கடந்த ஒரே ஆண்டில் அதிகளவில் போதை பொருள்கள் மீட்கப்படுவது இது மூன்றாவது முறை ஆகும்.
முன்னதாக, ரூ. 130 கோடி மதிப்பிலான போதை பொருள் கடந்த ஜூன் மாதமும், ரூ. 800 கோடி மதிப்பிலான போதை பொருள் கடந்தாண்டு செப்டம்பா் மாதமும் பறிமுதல் செய்யப்பட்டது.