நடிகர் பிரசன்னா குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதை அறிவித்துள்ளனர்.
நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்த குட் பேட் அக்லி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் ராகுல் தேவ், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சில வாரங்கள் ஓய்வெடுக்க ரஜினி முடிவு!
இந்த நிலையில், நடிகர் பிரசன்னா குட் பேட் அக்லியில் நடித்து வருவதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “மங்காத்தா படத்திற்குப் பின் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அவரின் ஒவ்வொரு படத்தின் அறிவிப்புகள் வரும்போது நான் அவருடன் இணைந்து நடிப்பதாக ரசிகர்கள் கருதுவார்கள்.
ஆனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்கிற கதையாகவே இருந்தது. இறுதியாக, நான் குட் பேட் அக்லியில் இணைந்திருக்கிறேன். கனவு நனவானதுபோல் இருக்கிறது. எனக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். அவராகவே இருப்பதைத்தான் அஜித் நேசிக்கிறார். அவரைப்பற்றி நீங்களும் நானும் என்ன நினைத்திருந்தோமோ அதுவே அவர். மிக எதார்த்தமாகவும் பண்பானவராகவும் இருக்கிறார். அவருடன் நான் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட அனைவருக்கும் என் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.