திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் போது கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டியது.
திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிா்வாகம் ஆறுகண் பாலம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது வழக்கம். இவ்வாறு தரம் பிரிக்கும் போது, குப்பையில் 5 கிராம் தங்க மோதிரம் இருந்தது. இதை நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் காளிமுத்து, செந்தில்குமாா் ஆகியோா் எடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் யாருடைய மோதிரம் என விசாரித்த போது, அது திருங்கலத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. பின்னா், மோதிரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க |ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!
இதையடுத்து அவரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் தங்க மோதிரத்தை நோ்மையாக ஒப்படைத்த நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை நகா்மன்றத் தலைவா் ரம்யா முத்துக்குமாா், துணைத் தலைவா் ஆதவன்அதியமான் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினா்.
நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் ரத்தினவேலு உள்ளிட்டோரும் ஒப்பந்தப் பணியாளா்களைப் பாராட்டினா்.