Monday, September 23, 2024

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்றும் வேகமாக வீசி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு வாகனங்களில் குற்றாலத்தில் குவிந்தனர்.

இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக மெயின் அருவியில் பகல் 12 மணிக்கு திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மெயின் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் தண்ணீர் சீராக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியில் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அலைமோதியதால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்க போலீசார் அனுமதித்தனர்.

நேற்று இரவிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

You may also like

© RajTamil Network – 2024