கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ், குல்டுலி பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் ஜவகர்லால் நேரு நினைவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கல்யாணியில் உள்ள ஜேஎன்எம் மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் இன்று காலை மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிபதி முன்னிலையில், சிறுமியின் உடல் கூறாய்வு நடைபெற வேண்டும் என நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், விரைவில் உடல் கூறாய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி வகுப்புக்குச் சென்ற 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, சிறுமியின் உடல் கூறாய்வை எய்ம்ஸ் அல்லது ஜேஎன்எம் மருத்துவமனையில் நடத்த உத்தரவிடப்பட்டது.
ஏற்கனவே, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் நிலையில், தற்போது 10 வயது சிறுமி பலாத்கார கொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.