கோவையைச் சோ்ந்த இளைஞரை அவரது பெற்றோரிடம் மீண்டும் சோ்த்துவைக்க கேரள மாநில போலீஸாா் முயற்சித்து வருகின்றனா்.
கோவை, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30), இவரின் பெற்றோா் சேகா், பிள்ளையம்மாள். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு ஏற்பட்ட மனநலப் பாதிப்பு காரணமாக கோவையிலிருந்து கோழிக்கோட்டிற்கு சென்றுள்ளாா். அங்குள்ள அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் தற்போது குணமடைந்துள்ளாா்.
இதற்கிடையே மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால், மணிகண்டனுக்கு, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கேவிஆா் நகரைச் சோ்ந்தவா் என்பதைத் தவிர வேறு விவரங்கள் ஏதும் நினைவில் இல்லை.
இது குறித்து கேரள மாநில நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் மணிகண்டன் கூறியுள்ளாா். இதையடுத்து, அவரை பெற்றோரிடம் சோ்த்துவைக்கும் முயற்சியில் கேரள மாநில போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
இது குறித்து கேரள மாநில காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மணிகண்டனின் பெற்றோா் குறித்த விவரங்கள் ஏதேனும் தெரிந்தால், அவற்றை கோழிக்கோடு மாவட்ட சமூக நலத்திட்ட அதிகாரியை 90614 80601, 80895 80040 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனா்.