திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாகக் கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் சடங்குகளில் கலந்து கொள்ள மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி, தனது எக்ஸ் பக்கத்தில், “மகா பரிசுத்தம், இறைவனின் தனித்தன்மை, வெங்கடேஸ்வரா சுவாமி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயர், பகவான் வெங்கடேஸ்வரர் வழங்கிய புனித லட்டுக்கள் மற்றும் வெங்கடேஸ்வரா சுவாமியின் புனிதத்தை இழிவுபடுத்திய முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாவங்களைத் தூய்மைப்படுத்த, வருகிற சனிக்கிழமையில் (செப். 28) மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்க ஒய்.எஸ்.ஆர்.சி.பி. அழைப்பு விடுக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் இது கலக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு அண்மையில் குற்றம் சாட்டினார்.
இதனிடையே திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
திருப்பதி லட்டு சர்ச்சை: வைரலான விடியோவை நீக்கிய பரிதாபங்கள் குழு!