சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார், மற்றொருவர் காயமடைந்தார். இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்த குகன்பாறையில் சிவகாசியை சேர்ந்த பாலமுருகன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை நாகபுரி தரச் சான்றிதழ் பெற்று செயல்பட்டு வருகிறது. சுமாா் 80- க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த ஆலையில் வியாழக்கிழமை காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தாா். அப்போது, பட்டாசுக்கு தேவையான மூலப்பொருள்கள் இறக்குவதற்காக லோடு ஆட்டோவில் செவல்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(25) மூலப்பொருள்களை பட்டாசு தொழிற்சாலையில் உள்ள ஒரு அறையில் இறக்கி வைத்துள்ளார். அப்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
தமிழ் ஆசிரியர் பணிக்கு ஹிந்தி, சமஸ்கிருதம் தகுதியா? – மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்
இதில், தொழிலாளி கோவிந்தராஜ் கட்டட ஈடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு தொழிலாளி திருத்தங்கல்லை சேர்ந்த குருமூர்த்தி(20) பலத்த காயமடைந்தார். அவரை மீட்ட மற்ற தொழிலாளிகள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொழிற்சாலையின் ஒரு அறை மட்டும் தரைமட்டமானது.
இதையடுத்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியிலும் மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலமும் மீட்புப் பணிகள் நடைபெற்றன.
இந்த விபத்து குறித்து பட்டாசு ஆலை உரிமையாளரான பாலமுருகன் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.