முடா நில முறைகேடு புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விசாரிக்கத் தடை இல்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தி, அதற்குப் பதிலாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில், ஆளுநரின் ஒப்புதலின்பேரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கருணாநிதி படித்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்!
ஆனால், சித்தராமையா தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறியது.
இதையும் படிக்க | அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து வழக்கின் இன்றைய விசாரணை நீதிபதி நாக பிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணை முடிவில், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் சித்தராமையா, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது.