நாடு முழுவதும் உள்ள அனைத்துச் சிறைகளிலும், எந்தவிதமான சாதிய பாகுபாடும் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில், சாதியை வைத்து பாகுபாடு காட்டக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் இயங்கும் சிறைகளின் கையேடுகளை அடிப்படையாக வைத்து, அங்கு சாதிய அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுவதாக வந்த குற்றச்சாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், சிறைகளில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கும், தொடர் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் பணி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 11 மாநில சிறைக் கையேடுகள் சாதிய பாகுபாட்டை ஊக்குவிப்பதாக உள்ளன. இந்த கையேடுகளில் உள்ள சில விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு. விளிம்பு நிலையில் அல்லது அடித்தட்டு மக்களை பாகுபாட்டுடன் நடத்துவதும் தவறு.
சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு, சுத்தம் செய்யும் பணி, சமையல் செய்யும் பணிகளை வழங்குவதில் சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் பணி ஒதுக்கக் கூடாது. சிறை விதிகளை அடுத்த 3 மாதங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோல, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளை ஒரு சில குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்குவது என்பது தவறானது எனறும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.