Friday, September 20, 2024

சிறைச்சாலைகள் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? – ஐகோர்ட்

by rajtamil
Published: Updated: 0 comment 0 views
A+A-
Reset

சிறைச்சாலைகள் விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா? – ஐகோர்ட்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் சிறை விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா என சிறைத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் கடந்த மார்ச் மாதம் திடீரென மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே புழல் சிறையில் உள்ள கேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த விசாரணை கைதியான பக்ரூதின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது புழல் சிறையில் உள்ள கேண்டீன் திறக்கப்பட்டுள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா என்பது குறித்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் கேண்டீன் திறந்திருப்பதாக அம்பத்தூர் குற்றவியல் நடுவர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ். நதியா, “சிறையில் உள்ள கேண்டீனை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் வெளியில் இருந்து வாங்கி வரப்பட்ட தின்பண்டங்களைக் கொண்டு கேண்டீன் வழக்கம்போல இயங்கி வருவது போன்ற தோற்றத்தை சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. திடீர் ஆய்வுக்கு உத்தரவிட்டால் மட்டுமே அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை வெளியே வரும்” என்றார்.

அதற்கு அரசு தரப்பில், “புழல் சிறையில் கேண்டீன் இயங்கவில்லை என ஒரே ஒரு கைதி மட்டுமே புகார் அளித்துள்ளார். சிறைத்துறை விதிகளின்படி சிறை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது” என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகள் ஒருவித அச்சம் காரணமாகவே தங்களது குறைகளை வெளியே கூறுவதில்லை. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் சிறை விதிகளுக்கு உட்பட்டே செயல்படுகின்றன என சிறைத்துறை அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா?" என கேள்வி எழுப்பினர்.

பின்னர், புழல் சிறையில் உள்ள கேண்டீன் சிறை விதிகளின்படி பராமரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் தொடர்ந்து இதேபோல பராமரிக்கப்படும் எனவும் சிறைத்துறை டிஐஜி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒருவார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.

You may also like

Leave a Comment

* By using this form you agree with the storage and handling of your data by this website.

© RajTamil Network – 2024