கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன், பெங்களூரு சிறையில் இருந்தவாறு விடியோ காலில் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று (ஆக. 35) சிறையில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் தேநீர்க் கோப்பை மற்றும் சிகரெட் உடன் ரெளடிகளுடன் நெருக்கமாக அமர்ந்து அவர் பேசும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று விடியோ கால் பேசிய விடியோ வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கெளடாவை சமூக வலைதளத்தில் சீண்டியதாக, தனது ரசிகர் ரேணுகா சாமியைக் கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் பவித்ரா கெளடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்றத் தலைவர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் தர்ஷன் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சிறை நாற்காலியில் சிகரெட் மற்றும் தேநீர் கோப்பையுடன் தர்ஷன் அமர்ந்துகொண்டு இருக்கும் புகைப்படம் வெளியானது.
அவருடன் ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகள் வெளியானது.
இந்தநிலையில், சிறையில் இருந்தவாறு நடிகர் தர்ஷன் விடியோ அழைப்பில் பேசும் விடியோ வெளியாகியுள்ளது. 25 விநாடிகள் கொண்ட அந்த விடியோவில் தர்ஷன் தனக்கு வேண்டியவருடன் விடியோ அழைப்பில் நலம் விசாரிக்கிறார். பதிலுக்கு மறுமுனையில் இருப்பவரும் தர்ஷனின் உடல்நிலை, வசதிகள் குறித்து கேட்டறிகிறார்.
இந்த விடியோ உண்மையா? அல்லது பழைய விடியோவா? என்பது தொடர்பாக உரிய விசாரணை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.